முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி கொலை வழக்கு: 12 பேருக்கு மரணதண்டனை; 21 பேர் விடுவிப்பு – நால்வருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை.

அரகலய என்றழைக்கப்படும் மக்கள் போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 12 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கே கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மேற்படி தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 41 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 37 பேர்தான் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்கள்.

மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இரு நீதிபதிகள், 12 பேருக்கும் மரண தண்டனை விதித்தனர். ஒருவர் 37 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், மேலும் நால்வருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 21 பேர் வழக்கிலிருந்து நிரபராதிகளாகக் கருதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், காலிமுகத்திடலில் அறவழியில் போராடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷ அணியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பலரும் களமிறங்கினார்கள். நாடு முழுவதும் வன்முறையும் வெடித்தது.

இந்நிலையில் நிட்டம்புவ நகரில் வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

கொழும்பில் இருந்து தமது ஊர் நோக்கிச் செல்லும் வழியிலேயே குழுவொன்றினால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.