ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்! ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க , இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரபாத் சந்திரகீர்த்தி, அரச சேவையில் 26 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இணைந்த அவர், 2010 இல் நிர்வாக சேவையின் தரம் I இற்கு தரம் உயர்த்தப்பட்டார். 2019 இல் விசேட தரத்துக்குப் பதவி உயர்வு பெற்றார்.

ஊவா மாகாண சபையின் கல்வி மற்றும் சுற்றுலா அமைச்சின் உதவிச் செயலாளரக 2001 இல் முதல் நியமனம் பெற்ற அவர் 2003 ஆம் ஆண்டு பியகம உதவி பிரதேச செயலாளராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தின் சபை முதல்வர் அலுவலகத்தின் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு 2010 இல் சிரேஷ்ட உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டு 2015 வரை பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு வரை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய பிரபாத் சந்ரகீர்த்தி, 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொழிலாளர் ஆணையாளர் நாயகமாக பணியாற்றினார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டதோடு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்று வரை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார். அவர் தற்போது அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகவும் கடமையாற்றி வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.