டில்லி பறந்தார் ஜனாதிபதி அநுர.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள் குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதுடில்லிக்குப் புறப்பட்டார். அவருடன் உயர்மட்டத் தூதுக்குழுவொன்றும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெறும் இந்த சர்வதேச மாநாடு, மனிதகுலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் முக்கிய அங்கமாக, நாளைமறுதினம் வியாழக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பாதை மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அதன் பங்களிப்பு குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
