வெளிநாட்டு சுற்றுலாப் பயணி காட்டு யானை தாக்கி மரணம் – மனைவியின் கண்முன்னே துயரம்.
சிகிரியா – பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் தனது மனைவியுடன் நேற்று சிகிரியா மற்றும் பிதுரங்கல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட வீதியில் நடைப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
திடீரென வீதிக்கு வந்த காட்டு யானை அவர்களைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிகிரியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
