எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து: சட்டத்தைச் சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான ‘நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்’ நாடாளுமன்றத்தில் 152 மேலதிக வாக்குகளால் அமோகமாக நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இந்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோரால் சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அந்தத் திருத்தங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் நிராகரித்ததைத் தொடர்ந்து, எவ்வித மாற்றங்களுமின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகரின் சான்றுரைப்படுத்தலைத் தொடர்ந்து, இது ‘2026 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டம்’ என உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம்,

1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் முழுமையாக நீக்கப்படுகின்றது.

தற்போது ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் எதிர்காலத்தில் அதற்கு உரித்துடையவர்கள் என அனைவருக்கும் இனிவரும் காலங்களில் அந்த கொடுப்பனவு நிறுத்தப்படும்.

இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நீண்டகால வரப்பிரசாதம் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.