இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தினர் பாராட்டு – பிரதமர் ஹரிணியுடன் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா விசேட சந்திப்பு.
இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால சவால்களை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் காத்திரமான முயற்சிகளைச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பாராட்டியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே இதனைத் தெரிவித்தார்.
‘டித்வா’ சூறாவளிப் பாதிப்பு காரணமாகப் பொருளாதார ரீதியாகப் பலவீனமடைந்துள்ள சமூகங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதுடன், அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என ஜோர்ஜிவா சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்தின் பின்னர் நாட்டை வழமைக்குக் கொண்டுவரச் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், பொருளாதார அபிவிருத்தியின் பயன்கள் அடிமட்ட மக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அறிவை வளர்ப்பதோடு மட்டுமன்றி, தொழில் சந்தைக்குத் தேவையான திறன் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டனர்.
மேலும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மேம்படுத்துதல், நிலையான மற்றும் நீண்டகால முதலீடுகளை இலங்கைக்கு ஈர்த்தல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தச் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளான அண்ட்ரியாஸ் பாயர், மார்த்தா வோல்டெமைக்கேல் ஆகியோருடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதி ஆளுநர் கலாநிதி சி. அமரசேகர மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
