மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள் – அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி பகிரங்க சவால்.

மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சியின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ குட்டியாராச்சி இந்தச் சவாலை விடுத்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு மாகாண சபைத் தேர்தலே தகுந்த களமாகும். எனவே, இந்தத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம்.

தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் பாரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.” – என்றார்.

எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி நீண்டகாலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயங்குகின்றது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.