மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க வேண்டாம்; தெரிவுக்குழு என்பது காலத்தைக் கடத்தும் தந்திரம்! – முன்னாள் அமைச்சர் ஹரின் சாடல்.

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக அரசு மேலும் காலத்தை இழுத்தடிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

அரசு தேர்தலைத் தாமதப்படுத்தாமல், இவ்வருடத்துக்குள் அதனை விரைந்து நடத்துவதற்குத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிய முறைமையா அல்லது பழைய முறைமையா என்பது குறித்துத் தெரிவுக்குழுவை அமைத்து விவாதிப்பது தேவையற்ற காலதாமதத்தையே ஏற்படுத்தும். இவ்வாறான பொறிமுறையின் ஊடாகத் தேர்தலை மேலும் தள்ளிப்போட அரசு முயற்சிப்பதாகவே மக்கள் கருதுகின்றனர்.

மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், நிலுவையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருடமே நடத்துவதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கான சட்டச் சிக்கல்கள் இருப்பின், அவற்றை விரைவாகத் தீர்த்துத் தேர்தலுக்கான சூழலை உருவாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.” – என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.