சவால்களைக் கண்டு அஞ்சும் தலைவர் நாமல் எம்.பி. அல்லர் – தற்துணிவு இருப்பதால்தான் நாமல் லண்டன் சென்றார் என்று இந்திக அனுருத்த விளக்கம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. எந்நாளும் சவால்களைக் கண்டு அஞ்சும் ஒரு தலைவர் அல்லர்” என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டமை குறித்து, கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறுகையில்:-

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் இவ்வாறான எதிர்ப்புகள் அன்று பலமாக இருந்தன. அத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவர் தனது பயணங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தார். அதேபோன்றதொரு சூழல்தான் தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, அங்குள்ளவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே அவர் லண்டனுக்குப் பயணமானார்.

நாமலின் உரைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி இங்கே சிலர் மகிழ்ச்சியடையலாம். ஆனால், கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்று தெரிந்தே லண்டனுக்குச் சென்ற அவரது தற்துணிவைப் பாராட்ட வேண்டும். அவர் எதற்கும் பின்வாங்கும் தலைவர் அல்லர். சவால்களை எதிர்கொள்ளும் பலம் அவரிடம் இருப்பதால்தான் அவர் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்.

தமிழ்ச் சமூகத்துடனும் மாணவர்களுடனும் திறந்த மனதுடன் விவாதித்து, உண்மை நிலையை விளக்கவே அவர் லண்டன் சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்புத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய தடைகள் நாமலின் அரசியல் பயணத்தையோ அல்லது கட்சியின் வீச்சையோ எவ்விதத்திலும் பாதிக்காது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.