ஈஸ்டர்.தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி நௌபர் மௌலவியே! – சரத் வீரசேகர கூறுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே தவிர, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே அல்லர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கையானது, கத்தோலிக்க திருச்சபையையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக அரசு ஆடிய ஒரு நாடகமாகும். தற்போது விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் நிலக்கரி மோசடிப் புகார்களில் சிக்கியுள்ள அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

2018ஆம் ஆண்டில் சுரேஷ் சலே, சஹ்ரானைச் சந்தித்தார் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது. அந்தக் காலப் பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை. அவர் மலேசியாவிலும் இந்தியாவிலும் தூதரகப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

சனல் 4 ஊடகம் வெளியிட்ட தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவை என்பதை ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான சுரேஷ் சலேவைச் சிறையில் அடைத்துவிட்டு, தாக்குதலுக்கு நிதியுதவி செய்தார் என்று கருதப்படும் இப்ராஹிம் போன்றவர்களைச் சுதந்திரமாக நடமாடவிடுவது எந்த வகையில் நியாயமானது? உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகள் வேட்டையாடப்படுவது கண்டிக்கத்தக்கது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.