அடுத்த இலக்கு கோட்டாவே! – விமல் பகிரங்க எச்சரிக்கை.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான ஒரு முன்னோடியே தவிர வேறில்லை எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற “சுரேஷ் சலே என்ன செய்தார்?” என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-

“மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அநுர தலைமையிலான அரசு ஆரம்பித்துள்ளது. இந்த அரசு திட்டமிட்ட முறையில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மிக அழகாக அரங்கேற்றி வருகின்றது.

சுரேஷ் சலேயின் கைது மூலம் அவர்களின் அடுத்த இலக்கு கோட்டாபய ராஜபக்ஷவே என்பது தெளிவாகின்றது. ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட சஹ்ரான் ஹாஷிம், ஒரு தீவிர சிங்கள பௌத்த தலைவராகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்வாரா? இது முற்றிலும் முட்டாள்தனமான வாதமாகும்.

புலனாய்வு அதிகாரிகள் சஹ்ரான் அல்லது பிரபாகரன் என யாராக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு கருதி அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவது இயல்பானது. சஹ்ரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் கிடைத்தவுடனேயே அவரைக் கண்காணிக்கத் தொடங்கியது புலனாய்வுப் பிரிவினர்தான் என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், புலம்பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே இவ்வாறான துரோகச் செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அரசின் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.