’20’ திருத்தம் தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது! – கரு கடும் விமர்சனம்.

’20’ திருத்தம் தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது! – கரு கடும் விமர்சனம்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய ராஜபக்ச அரசை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் அரசுடன் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நின்றார்கள். அதனூடாக வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, மக்களின் ஒற்றுமையைப் பலிகொடுத்தேனும் அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதே அரசின் தேவையாக இருந்தது. ஆனால், தற்போதுவரை குறைந்த பட்சம் பொருட்களின் விலைகளிலேனும் மட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அரசு தவறியிருக்கின்றது.

நாங்கள் மீண்டும் கூறுகின்றோம். அரசமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது உண்மையில் ஒரு தற்கொலை முயற்சி.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கிய மைல்கல்லாகும்.

அந்தத் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருப்பதை உலகத் தலைவர்கள், சர்வதேசக் கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

இதுவே மனிதாபிமானத்துக்கு ஏற்படக்கூடிய மிகப் பெரும் சவாலாக இருக்கும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.