வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை இரு வாரங்களுக்கு விசா காலம் நீடிப்பு – கட்டணம் கிடையாது என்றும் அரசு அறிவிப்பு.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் விமானப் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேற முடியாமல் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க அரசு தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

“விமானப் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள், காலாவதியான விசா காரணமாக சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வார கால விசா நீடிப்புக்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.” – என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதனால் இலங்கைக்கு சுற்றுலா வந்த மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வந்திருந்த வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களுக்கான நிவாரணமாகவே இந்தத் தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ளது.

விசா காலத்தை நீடிப்பதன் மூலம் வெளிநாட்டவர்கள் சட்டபூர்வமாக நாட்டில் தங்கியிருக்க முடியும் என்றும், அவர்களுக்குத் தேவையான மேலதிக உதவிகளை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் தயாராக உள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.