மகிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார்.
அதாவது 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலமும் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய மற்றும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

19ம் திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படுகின்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களது பெயர்கள், அப்போது நடைமுறையில் இருந்து அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆனால் 20ம் திருத்தத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழவின் உறுப்பினர்களது எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த உறுப்பினர்களது பெயர்களை ஜனாதிபதி நாடாளுமன்ற பேரவைக்கு சமர்ப்பித்து, நாடாளுமன்ற பேரவை மீண்டும் தமது ஆய்வினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். இந்த ஆய்வு கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்ற பேரவையை புறக்கணித்தேனும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், 20ம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக புதிய தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தவாரமளவில் நியமிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.