ஈரான் மீதான தொடர் தாக்குதல் ஐ.நா. சாசனத்தை மீறும் செயல்! – நாடாளுமன்றத்தில் சஜித் கடும் கண்டனம்.

ஈரான் மீதான தொடர் தாக்குதலானது சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், ஈரான் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். அதேவேளை ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்த தாக்குதல்களையும் தாம் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தின் அமைதியைக் குலைக்கும் எந்தவொரு வன்முறை நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரம், அந்நியச் செலாவணி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றில் ஏற்படவுள்ள பாரதூரமான தாக்கங்கள் குறித்து அவர் சபையில் கவலை வெளியிட்டார்.

இப்பிரச்சினையைச் கையாள்வதற்குத் தேசிய ரீதியிலான ஒருமித்த கருத்து அவசியம் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உடனடி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்று, நாட்டின் நலன் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.