திருமலையில் அதிரடிச் சோதனை: துப்பாக்கி, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்!

திருகோணமலை மாவட்டத்தின் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கந்தளாய், வான்எல, பன்சல்கொடல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 1,450 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகவே இந்த உள்ளூர் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் வான்எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரைக் கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.