ஈரான் விவகாரத்தில் அரசின் மௌனம் சந்தர்ப்பவாத அரசியல்! – முஜிபுர் ரஹ்மான் கடும் சாடல்.
ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை அரசு மௌனம் காப்பது பாரதூரமானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நடைபெற்ற சபை அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அது இலங்கைக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.
அங்கு பணிபுரியும் 10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுக்கும்.
முன்னர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியவர்கள், இன்று ஆட்சியில் அமர்ந்தவுடன் மௌனமாக இருப்பது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுகின்றது. அரசு சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டது.
ஈரான் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் பலவும் கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில், இலங்கை ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கூட நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. இது இலங்கையின் நீண்டகால மற்றும் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கைக்கு முரணானது.
ஜனாதிபதி இக்கட்டான இந்தச் சூழலில் நேரடியாகப் பேசாமல், அமைச்சர்கள் கூற வேண்டிய சாதாரண விடயங்களையே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்.” – என்று முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சுமத்தினார்.
