முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் காலமானார்

கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் (89) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

இந்திய அரசியலில் கடந்த 1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவர் கே.பி.உண்ணிகிருஷ்ணன். கடந்த சில மாதங்களாக முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னதாக, கேரள மாநிலத்தில் உள்ள வடகரா தொகுதியில் இருந்து கே.பி.உண்ணிகிருஷ்ணன் மக்களவை உறுப்பினராக தொடர்ச்சியாக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் அரசில் அவர் அமைச்சராகப் பதவி வகித்தார். 1989-90 காலகட்டத்தில் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக அவர் இருந்தார். வளைகுடா போர் நடைபெற்ற காலகட்டத்தில் அங்கிருந்து இந்தியர்கள் பத்திரமாக வெளியேறி தாயகம் திரும்பும் ஏற்பாடுகளை அமைச்சர் என்ற முறையில் அவர் மேற்பார்வையிட்டார்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய கே.பி.உண்ணிகிருஷ்ணன், மக்களவைக்கு முதல்முறையாக கடந்த 1971-இல் வடகரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.