அமெரிக்காவே உறுதிப்படுத்திய பின்னும் அரசு மௌனம் ஏன்? – ஈரானியக் கப்பல் தாக்குதல் விவகாரத்தில் சஜித் கேள்வி.

இலங்கைக் கடற்பரப்புக்கு அண்மையில் நேற்று ஈரான் கப்பல் ஒன்றின் மீது வெளிநாட்டு அரசொன்றினால் ‘டார்பிடோ’ ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு அது மூழ்கடிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அரசு உடனடியாக உத்தியோகபூர்வ விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மை தொடர்பான பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

“காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40-44 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ஈரான் கப்பல், வெளிநாட்டு அரசொன்றின் தலையீட்டினால் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரே இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அத்தகைய சம்பவம் நடக்கவில்லை எனக் கூறுவது வியப்பளிக்கின்றது.” – என்று சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

“இந்தத் தாக்குதல் இலங்கையின் கடல் எல்லைக்குள்ளோ அல்லது பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்துக்குள்ளோ இடம்பெற்றதா என்பது குறித்து அரசு மௌனம் காப்பது ஏன்?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“தேசிய பாதுகாப்பு குறித்துப் பாடம் எடுப்பதாகக் கூறும் அமைச்சர்கள், எமது கடல் எல்லையில் நடக்கும் இவ்வாறான பாரிய அனர்த்தங்களை அறியாமல் இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானது” – என்றும் அவர் சாடினார்.

கப்பல் விபத்தில் சிக்கியவர்களை மீட்க இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பாதுகாப்பதற்கு காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வசதிகள் போதாத நிலையில், 40 அடி குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை வைத்தியர்கள் கோரியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

அனர்த்தத்துக்குள்ளான ஈரான் கப்பலைத் தவிர, கொழும்பு துறைமுகத்துக்கு மிக அண்மையில் மற்றுமொரு ஈரான் கப்பல் தென்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் கடல் சட்ட மாநாட்டின் விதிகளின்படி, நாட்டின் இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, இந்தச் சர்வதேச விவகாரத்தில் இலங்கை எடுத்த இராஜதந்திர நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அரசு உடனடியாக விசேட அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.