அவசரமாக புதுடில்லி பறந்தார் விஜித ஹேரத்! – ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பதற்றங்களுக்கு மத்தியில் முக்கிய விஜயம்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அவசரமாக இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புவிசார் அரசியல் மாநாடான ‘ரைசினா’ கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச கடற்பரப்பில், இலங்கைக்கு அண்மித்த பகுதியில் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளமை அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

குறிப்பிட்ட ஈரானியப் போர்க்கப்பலானது, இந்தியாவில் நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சியை நிறைவு செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ள சூழலில், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் எல்லைகளின் உறுதித்தன்மை குறித்து இந்தியத் தரப்புடன் அமைச்சர் விஜித ஹேரத் முக்கிய பேச்சுகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இப்பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

இதேவேளை, பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில், இலங்கை வெளிவிவகார அமைச்சரின் பங்களிப்பு, தற்போதைய நெருக்கடியான சூழலில் பிராந்திய உறவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.