ஈரான் கடற்படையினரை திருப்பி அனுப்பாதீர்கள்! இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம் என ‘ரொய்டர்ஸ்’ செய்திச் சேவை பரபரப்பு தகவல்.

இலங்கைக் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட ஈரான் கடற்படையினரை மீண்டும் ஈரானுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றது என ‘ரொய்டர்ஸ்’ செய்திச் சேவை பரபரப்புத் தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரகசிய உள்நாட்டுத் தகவல் பரிமாற்றங்களை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

“கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹொவெல், இலங்கை அரசுடன் நடத்திய பேச்சின் போது, ஈரான் கடற்படையினரை மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். ‘IRIS Dena’ கப்பலில் இருந்து உயிர் தப்பிய 32 பேர் மற்றும் ‘IRIS Booshehr’ கப்பலில் இருந்த 208 ஊழியர்களையும் இவ்வாறு ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.” – என்று ‘ரொய்டர்ஸ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஈரான் கடற்படையினர் தமது நாட்டுக்குத் திரும்பினால், அவர்கள் அந்நாட்டு அரசால் அரசியல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அமெரிக்கா இந்த அழுத்தத்தைப் பிரயோகிப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதுவரிடமும் ஜேன் ஹொவெல் இது குறித்துக் கருத்துப் பகிர்ந்துள்ளார். இதன்போது, கொழும்பில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரான் கடற்படையினரை ஈரானுக்கு அனுப்பும் திட்டம் தற்போது இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அந்தப் பணியாளர்களை ஈரானுக்குச் செல்லவிடாது தடுத்து, அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்வதை ஊக்குவிக்க ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா என இஸ்ரேலியத் தூதுவர் அமெரிக்கத் தரப்பிடம் வினவியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈரான் கப்பல் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஈரான் கடற்படையினரை இலங்கை பொறுப்பேற்றமை ஒரு ‘மனிதாபிமானக் கடமை’ எனத் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்காவின் அழுத்தம் குறித்து ஜனாதிபதி செயலகமோ அல்லது வெளிவிவகார அமைச்சோ இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

இதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் சடலங்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புமாறு ஈரான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி, அதற்கான கால எல்லை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் காலி கடற்பரப்பிலிருந்து 19 கடல் மைல் தொலைவில் வைத்து ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதன்போது ஈரான் கர்ப்படையினர் பலர் உயிரிழந்தனர். 32 பேர் காயங்களுடன் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மற்றுமொரு ஈரான் போர்க்கப்பலான ‘IRIS Booshehr’ இலங்கைக் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், அதில் இருந்த 208 ஈரான் கடற்படையினர் வெலிசரை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.