சபையில் அனல் பறந்த மோதல்: வாயிருக்கின்றது என்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்! – நளின் பண்டாரவைச் சாடிய பிமல் ரத்நாயக்க.
நாடாளுமன்றத்தில் நேற்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் நேற்று நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தைப் பார்வையிடச் சென்றுள்ளமை குறித்துக் கருத்து வெளியிட்ட நளின் பண்டார, “கோப் குழுவின் தலைவர் என்பவர் ‘டோபி’ வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர் அல்லர்” எனச் சாடினார்.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,
“வாய் இருக்கின்றது என்பதற்காக வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம். நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றனர். விசாரணைகளை முன்னெடுக்கவும், விடயங்களை ஆராயவும் அவர்களுக்குப் பூரண உரிமை உண்டு. அவர்கள் தவறு இழைத்தால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும். அதை விடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்.” – என்று கடுமையாகத் தெரிவித்தார்.

இதன்போது நளின் பண்டார மீண்டும் குறுக்கிட்டுப் பேச முயன்ற போதிலும், அவருக்கு ஒலிவாங்கி வழங்கப்படவில்லை. இதனால் சபையில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.
