ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் தீர்மானம்.
இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்துக்குச் செல்லுபடியாகும் இலவச விசாக்களை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தத் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஈரானியக் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள், இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர்களுக்கு மனிதாபிமானப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இந்த ஒரு மாத கால இலவச விசா வழங்கப்படுகின்றது. எதிர்காலத்திலும் இவ்வாறான இடர்மிக்க சூழல்கள் ஏற்படும் போது, இத்தகைய மனிதாபிமான முடிவுகள் எடுக்கப்படலாம்.
ஈரானிய மாலுமிகள் தொடர்பான இந்தத் தீர்மானமானது, சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இலங்கைக்குப் பொருந்தக்கூடிய கடல்சார் சட்டங்களை மிகத் துல்லியமாகப் பின்பற்றியே எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மட்டத்தில் இலங்கை தனது மனிதாபிமானப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதை இது உலகுக்கு வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, இலங்கை யாருக்கும் அடிபணியாது என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது.
இந்த விவகாரத்தைக் கையாள்வதில் இலங்கை அரசு தனது ‘அணிசேராக் கொள்கைக்கு’ இணங்கவே செயற்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு குறிப்பிட்ட தரப்பினருக்கும் ஆதரவாகவோ அல்லது பாதிப்பாகவோ அமையும் நோக்கத்தில் எடுக்கப்படுபவை அல்ல. இதன் மூலம் சர்வதேச அரசியலில் நடுநிலையைப் பேணுவதோடு, மனிதாபிமானக் கடமைகளையும் இலங்கை முன்னெடுத்து வருகின்றது.” – என்றார்.
