மூன்று மாதங்களுக்குள் அறிக்கை கிடைத்தால் இவ்வருடம் தேர்தல் உறுதி – விசேட தெரிவுக்குழுவுக்கு ரத்நாயக்க கெடு.

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழு, எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்குமாயின், இந்த ஆண்டுக்குள்ளேயே தேர்தலை நடத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நிலவும் இழுபறிகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமையில், எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் கடந்த பல வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கி வருகின்றன.

பழைய விகிதாசார முறைமையில் தேர்தலை நடத்துவதா அல்லது புதிய கலப்பு முறைமையில் நடத்துவதா என்பது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாகத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் முறைமை மற்றும் சட்டத் திருத்தங்களை ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு, எதிர்வரும் மே மாதத்துக்குள் (மூன்று மாத கால அவகாசம்) தனது விதப்புரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

குறித்த குழுவில் முன்னிலையாகி தேர்தல்கள் ஆணைக்குழு சார்பான யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.

எல்லை நிர்ணயப் பணிகள் முடியும் வரை பழைய விகிதாசார முறைமையிலாவது தேர்தலை நடத்தி, மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.

தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், சட்ட ரீதியான அதிகாரங்களைப் பயன்படுத்தித் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஆணைக்குழு உடனடியாக ஆரம்பிக்கும். இதன் மூலம் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்த முடியும்.” – என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.