சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கியவர் யார்?

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் இன்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் அதிரடியாகக் கீழே இறக்கினர். அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தச் செயல் பெரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

புகைப்பட ஆதாரங்களுடன்
களமிறங்கிய சி.ஐ.டியினர்

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார், இச்சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட மிக முக்கியமான புகைப்பட ஆதாரங்கள் மற்றும் சி.சி.ரி.வி. காட்சிகள் சகிதம் இன்று பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தனர்.

துணைவேந்தரிடம்
தீவிர விசாரணை

பல்கலைக்கழகத்தின் உச்சபட்ச அதிகாரி என்ற அடிப்படையில், துணைவேந்தரிடம் இச்சம்பவம் குறித்து நீண்டநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

பதிவாளரிடமும்
விசாரணை

நிர்வாக ரீதியிலான பொறுப்புக்கூறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துப் பதிவாளரிடம் பொலிஸார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கைது நடவடிக்கை
நெருங்குகின்றதா?

கொடியை இறக்கிய மாணவர்கள் யார்? அவர்களைத் தூண்டிவிட்டவர் யார்? என்பது குறித்துப் பொலிஸார் ஏற்கனவே ஒரு பட்டியலைத் தயார் செய்துள்ளனர் என்று தெரிகின்றது.

இந்த வாக்குமூலப் பதிவுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் அல்லது கைதுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பல்கலைக்கழக வட்டாரத்தில் கடும் பதற்றம் நிலவுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.