பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இரத்து! – சாகர காரியவசம் உத்தியோகபூர்வ அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மே முதலாம் திகதி மே தினக் கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்தப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மே தினக் கூட்டத்தை இரத்துச் செய்தமைக்கான காரணத்தை விளக்கிய அவர், மேலும் கூறுகையில்,

“இம்முறை மே மாதம் முதலாம் திகதி புனித பூரணை தினமாக அமைவதால், அன்றைய நாளில் அரசியல் கூட்டங்கள் அல்லது பேரணிகளை முன்னெடுக்கப்போவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மே முதலாம் திகதி நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டாலும், மக்கள் கூட்டம் மற்றும் பேரணிகள் பிறிதொரு நாளில் பிரம்மாண்டமாக நடத்தப்படும்.” – என்றார்.

மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்வாங்குவதாக எழுந்துள்ள விமர்சனங்களை அவர் முற்றாக நிராகரித்தார்.

“எமக்கு மக்கள் பலம் இல்லை என எவரும் நினைக்க வேண்டாம். எமக்கு இன்னும் மக்கள் ஆதரவு பலமாகவே உள்ளது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தற்போதைய அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். அப்போது மக்கள் பலம் யாருக்கு உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வரும்.” – என்று சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்தத் தீர்மானம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.