செம்மணி மனிதப் புதைகுழி: ஏப்ரல் 20 இல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம் – யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவு.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.

விசாரணையின் போது மன்று வழங்கிய முக்கிய உத்தரவுகள் வருமாறு:-

துப்பரவுப் பணிகள்
மற்றும் உட்கட்டமைப்பு

புதைகுழியைச் சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு செய்ய வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டது.

அத்துடன், ‘டித்வா’ புயல் மற்றும் பருவ மழையினால் சேதமடைந்துள்ள தற்காலிகக் கொட்டகைகளை அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான தளபாட வசதிகளைச் செய்து கொடுக்கவும் பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டது.

கள தரிசிப்பு மற்றும்
நீர் வெளியேற்றம்

வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரனித்தா மற்றும் நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் ஆகியோர் புதைகுழி பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தினர்.

தற்போது புதைகுழிக்குள் நீர் தேங்கி நிற்பதனால், எதிர்வரும் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த விசாரணையும்
அகழ்வுப் பணிகளும்

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.