45 ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு அனுப்பிவைப்பு!
காலிக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லையில் அமெரிக்காவின் டொர்பிடோ தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்ட ‘ஐரிஸ் டெனா’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில் 45 பேரின் சடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
காலி போதனா வைத்தியசாலையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 சடலங்களும் தற்போது மத்தள சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
உயிரிழந்த ஏனைய ஈரானிய மாலுமிகளின் சடலங்களும் அடுத்தடுத்த கட்டங்களாக அந்நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
குறித்த சடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதிவான் சமீர தொடன்கொட பிறப்பித்த உத்தரவுக்கமையவே, இவை இன்று வான்வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த 4 ஆம் திகதி காலித் துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டொர்பிடோ தாக்குதலினால் ‘ஐரிஸ் டெனா’ கப்பல் கடலில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.
