அரச நிறுவனங்களில் முறைகேடுகளைத் தடுக்க புதிய விசாரணை அதிகாரிகள் குழாம் நியமனம் – 14 நாள்கள் விசேட பயிற்சி வழங்க முடிவு.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் ஒழுக்கக்கேடுகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, புதிய விசாரணை அதிகாரிகள் குழாம் ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கெனக் கோரப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 150 அதிகாரிகள் முதற்கட்டமாக இக்குழாமில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட இந்த அதிகாரிகள் 50 பேரைக் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் தலா 14 நாள்கள் கொண்ட விசேட பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அரச நிறுவனங்களில் முறையான பயிற்சியுடன் கூடிய விசாரணை அதிகாரிகளை உருவாக்குவதும், ஏனைய நிறுவனங்களில் இருந்து அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் கையாளுவதுமே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.