இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்பு: கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் – யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் குறித்து விசேட கவனம்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், தற்போது நடைமுறையிலுள்ள பல கலாசாரத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை அப்பகுதி மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பது மற்றும் அதன் எதிர்காலப் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்தியா வழங்கவுள்ள ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை கலாசார ரீதியாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு இந்தச் சந்திப்பு வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.