தூரப் பிரதேச விசேட வைத்தியர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை – சுகாதார பிரதி அமைச்சர் தகவல்.

தூரப் பிரதேசங்களிலிருந்து வருகை தந்து கடமையாற்றும் விசேட வைத்தியர்களுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தூரப் பிரதேசங்களில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் வருகை தொடர்பான விவர அறிக்கையொன்றைத் திரட்டுவதற்கு சுகாதார அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

விசேட வைத்தியர்களுக்கு மேலதிகமாக, இவ்வாறான பிரதேசங்களில் கடமையாற்றும் ஏனைய சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் மேலதிக எரிபொருளை வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அம்புலன்ஸ் வாகனங்களுக்கான எரிபொருளை எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி (நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டுக்குப் புறம்பாக) தடையின்றி வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.