தேசிய கண் வைத்தியசாலை வைத்தியரின் வீட்டில் கொள்ளை: ‘அங்கொட ரோசி’ தலைமையிலான கும்பல் போதைப்பொருளுடன் வசமாகச் சிக்கியது!

தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் வீட்டை உடைத்து, வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்த ‘அங்கொட ரோசி’ தலைமையிலான மூவர் அடங்கிய கும்பலை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலில் வைத்துப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொள்ளைக் கும்பலை 27 வயதுடைய ‘அங்கொட ரோசி’ என அழைக்கப்படும் பெண்ணே வழிநடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் ஐஸ் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நவகமுவ, கடுவலை மற்றும் அங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நான்கு மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களில் இரண்டு, அங்கொட பகுதியிலுள்ள பாழ் நிலம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 16 ஆம் திகதி முல்லேரியா பகுதியில் சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலமே, அங்கொட ரோசி மற்றும் அவரது கும்பல் குறித்த இரகசியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.