சந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் கொஸ்தாபல்: 10 ரவைகளுடன் கூடிய கைத்துப்பாக்கிப் பாகம் மாயம்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர் ஒருவரைத் துரத்திச் சென்ற பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரிடமிருந்த 10 ரவைகள் அடங்கிய கைத்துப்பாக்கியின் மகசின் காணாமல்போயுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு கொஸ்தாபல்கள் நேற்றுமுன்தினம் இரவு கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு கொஸ்தாபல் வசம் இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தலா இரண்டு மகசின்கள் வழங்கப்பட்டிருந்தன.

ரோந்துப் பணியின் போது, காலிமுகத்திடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை நிறுத்தி பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். அவரது அடையாள அட்டையை வினவியபோது, அந்த நபர் திடீரென பொலிஸாரிடமிருந்து தப்பியோடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரைத் துரத்திச் சென்ற போதிலும், அவரைப் பிடிக்க முடியவில்லை. மீண்டும் தமது கடமை இடத்துக்குத் திரும்பியபோது, ஒரு கொஸ்தாபல் தனது கைத்துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டிருந்த 10 ரவைகளைக் கொண்ட மகசின் காணாமல்போயுள்ளதை அவதானித்துள்ளார்.

சந்தேகநபரைத் துரத்திச் சென்ற வேகத்தில் அல்லது அந்தப் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது இந்த மகசின் தவறி விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. மாயமான துப்பாக்கிப் பாகத்தையும் ரவைகளையும் கண்டறியக் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.