மனைவி, மாமியார் மீது கொடூர தாக்குதல்: என்.பி.பி. பிரதேச சபை உறுப்பினர் கைது!

தனது மனைவி மற்றும் அவரது தாயார் (மாமியார்) மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ், கெலன்பிந்துனுவெவ பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் மொரகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி பிரதேச சபை உறுப்பினர் தனது மனைவியையும், இடையில் தடுக்க வந்த மாமியாரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இருவரும் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக முதலில் கெலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களது நிலைமையைக் கருத்திற்கொண்டு, மேலதிக சிகிச்சைக்காக தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.