ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழப்பு: மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் விபரீதம்

குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பலியானவர் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகின்றது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.

அவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வரும் அவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த சந்தன செல்வத்தின் உடலை குவைத்தில் உள்ள மத்திய சவக்கிடங்குக்கு சென்று இந்தியத் தூதர் பார்வையிட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், சந்தன செல்வத்தின் உடலைக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் இந்திய தூதரகம் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்காசியப் போரில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.