தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி: இரண்டாவது சந்திப்பை அடுத்த வாரம் நடத்தத் தீர்மானம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் நோக்கில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, சமஷ்டி முறையிலான அரசமைப்புக்கான சமூக ஒப்பந்தமொன்றைத் தயாரித்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வில் தனித்துக் செயற்படுவதில்லை போன்ற முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தையை கடந்த 19 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடி நிலைகள் காரணமாக அச்சந்திப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களான க.ச. இரத்தினவேல், வி.புவிதரன், பேராசிரியர் அ. சர்வேஸ்வரன், சுகந்தி இராஜகுலேந்திரா, வ.ச.நிறைஞ்சன், ஞா.க. ரனித்தா மற்றும் ம. யூட் டினேஷ் ஆகியோர் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கூடி இது குறித்து ஆராயவுள்ளனர்.

சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் வசதியைப் பொறுத்து, இந்த இரண்டாவது தீர்க்கமான சந்திப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் நடைபெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.