கடலில் நீராடிய 19 வயது இளைஞர் மாயம்! – தேடுதல் பணிகளில் கடும் சவால்.
அம்பாந்தோட்டை, தங்கல்ல – மெதல்ல கடற்கரைப் பகுதியில் நீராடச் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல்போன இளைஞர் நாகுலுகமுவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞர் தனது நண்பருடன் மெதல்ல கடற்கரைப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே, திடீரென உருவான பாரிய அலையில் சிக்கிக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல்போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காகத் தங்கல்ல பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கடலில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் நீரோட்டம் காரணமாகத் தேடுதல் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
