அமைச்சரவை முழுதும் சிறை செல்ல நேரிடும்! – நிலக்கரி ஊழல் குறித்து சானக எம்.பி. எச்சரிக்கை.
“ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல்வாதிகளைப் பாதுகாத்து வருகின்றனர். நிலக்கரி கொள்வனவு மோசடி காரணமாக வருங்காலத்தில் முழு அமைச்சரவையுமே சிறை செல்ல நேரிடும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் ஊழலுக்கு எதிரானவர்கள் யார், ஊழலுக்குச் சார்பானவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
அவசர தேவைக்கான முறையான காரணங்கள் எதுவுமின்றி, தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. புதிய நிறுவனம் ஒன்றிற்கு விதிமுறைகளை மீறி விலைமனுகோரல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தரமற்ற நிலக்கரியால் மின்சார உற்பத்தியில் பாரிய விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பான மோசடிகள் குறித்துப் பொறுப்பான அமைச்சருடன் விவாதத்தில் ஈடுபட நாம் தயாராக உள்ளோம்.
அமைச்சர்கள் தவறுகளைத் தெரிந்தே செய்கின்றார்களா அல்லது தெரியாமல் செய்கின்றார்களா என்பது புரியவில்லை. எதிர்க்கட்சிகள் குறைகளைச் சுட்டிக்காட்டியவுடன் இரகசியமாகத் திருத்திக் கொள்கின்றனர். ஆனால், வெளியில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கின்றனர். ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஊழலை முன்னிலைப்படுத்தியே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.
முறையற்ற நிலக்கரி கொள்வனவு மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நிர்வாகச் சீர்கேடுகளினால் தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் எதிர்காலத்தில் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.” – என்றார்.
