நிலக்கரி ஊழலால் 22 பில்லியன் நட்டம்: அமைச்சர் குமார ஜயக்கொடி பதவி விலகியிருக்க வேண்டும்! – முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கடும் தாக்கு.

நிலக்கரி கொள்வனவு மோசடி மூலம் நாட்டுக்கு 22 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாகப் பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-

“புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போதும் பதவிகளைத் துறக்கத் தயாராக இல்லை. முன்னைய அரசாங்க காலங்களில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் திலக் மாரப்பன போன்றோர் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது கௌரவமாகப் பதவி விலகினார்கள். ஆனால், இன்றைய அமைச்சர்களைப் பாதுகாக்க ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் முற்படுகின்றனர்.

அமைச்சர் குமார ஜயக்கொடி, உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தபோது இடம்பெற்ற ஊழல் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குறைந்தபட்சம் அந்த விசாரணை முடியும் வரையாவது அவர் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது கவலைக்குரியது.

நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட நட்டத்தைத் திறைசேரி மூலமோ அல்லது மின் கட்டண அதிகரிப்பு மூலமோ ஈடுசெய்யப் போவதாக ஜனாதிபதி கூறுகின்றார். திறைசேரிப் பணமும் மக்களின் பணமே, மின் கட்டணமும் மக்களின் பணமே. அமைச்சரின் தவறை மறைத்து அந்த நட்டத்தை மக்களின் தலையில் சுமத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

நிலக்கரி கொள்வனவு தொடர்பான கணக்காய்வு அறிக்கையைத் தயாரிக்கும்போது, ‘கோப்’ குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்துக்குச் சென்று அழுத்தம் கொடுத்துள்ளார். ஒரு சுயாதீன திணைக்களத்துக்குச் சென்று அழுத்தம் கொடுக்க இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீண்டகாலமாக கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் இழுத்தடித்ததன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளது. தற்போதைய கணக்காய்வு அறிக்கையை அரசு ஏற்கின்றதா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.