பாதசாரி கடவையில் ஒருவர் வான் மோதி பரிதாபப் பலி! – கிளிநொச்சி ஏ – 9 வீதியில் கோரம்.

கிளிநொச்சி ஏ – 9 பிரதான வீதியில், பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் வான் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அதிவேகமாகச் சென்ற வான் ஒன்றே, பாதசாரி கடவையூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கிய 44 வயதுடைய நபர் பலத்த காயமடைந்துள்ளார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக கிளிநொச்சி போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைக் கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சாரதியின் கவனக்குறைவு அல்லது அதிவேகமே விபத்துக்குக் காரணமா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

பாதசாரி கடவைகளில் வாகனங்கள் மிகுந்த அவதானத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும், இவ்வாறான விபத்துக்கள் நேர்வது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.