விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இந்த விபத்தில் 17 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தில் 4 அறைகளும் சேதமடைந்தன. பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனுமதியுடன் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆய்வு செய்து வருகிறார்.
