2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணைகள் ஆரம்பம் – மல்வத்து பீட மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற பின் பிரதமர் தெரிவிப்பு.

நிதி அமைச்சின் வெளிநாட்டு மூலவளத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பாக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கண்டியில் இன்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்தச் சைபர் திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விரிவான புலனாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், இது தொடர்பில் சர்வதேச உதவிகள் கிடைத்துள்ளன என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, ஆஸ்திரேலிய அரசு இந்த விசாரணை நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளது என்று இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளை விமர்சித்த பிரதமர், அவர்கள் அரசை நெருக்கடிக்குள்ளாக்க அடிப்படை ஆதாரமற்ற வாதங்களை முன்வைத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

“மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை எதிர்க்கட்சியினர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர்” என்றும் பிரதமர் சாடினார்.

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சியினர் கூறி வருவதைக் குறிப்பிட்ட அவர், “நான் அதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றேன். அதனை அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது, உண்மைகளை முன்வைப்பதற்கும் அவர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்கும் எனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும்” என்றும் தெரிவித்தார்.

இந்த மோசடி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இயன்ற வரை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று நேற்று உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.