வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த அமைத்த பொறியில் சிக்கி விவசாயியே உயிரிழப்பு! – மொரவெவவில் சோகம்.

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6 ஆம் கட்டைப் பகுதியில், விவசாய நிலமொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 57 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

மொரவெவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வனவிலங்குகளிடமிருந்து தனது விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காக அவரே சட்டவிரோதமான முறையில் இந்த மின்சாரக் கம்பியை இழுத்து மின்சாரம் பாய்ச்சியிருந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது, தான் அமைத்திருந்த மின்சாரக் கம்பியில் எதிர்பாராத விதமாகத் தட்டுண்டமையாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகினறது.

வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க இவ்வாறான சட்டவிரோத மின்வேலிகளை அமைப்பது ஆபத்தானது மாத்திரமன்றி, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்த மொரவெவ பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.