தையிட்டி போன்றவற்றை வைத்து தம் அரசியலை தக்க வைப்பதற்கு வடக்குத் தலைவர்கள் முயற்சி! – யாழ். மே தின நிகழ்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு.

“வடக்கிலும் தையிட்டிப் பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியலை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.” – என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் நெடுந்தூர பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்கள் உருவாக்கிய பிரச்சினைகள் புற்றுநோய் போன்று பரவி உள்ளன. இவை யாழ்ப்பாணம், மாத்தறை, கொழும்பு என அணைத்து இடங்களிலும் பரவியுள்ளன.

பல வருடங்களானாலும் தீர்வுகள் எட்டப்படக்கூடா என்ற எண்ணத்தில் சூட்சமமாகச் சிந்தித்து கடந்த கால ஆட்சியாளர்கள் பல பிரச்சினைகளை உருவாக்கி இருக்கின்றார்கள். எனவே அந்தப் பிரச்சினைகளை நாங்களும் பொறுமையாக சிந்தித்தே தீர்க்க வேண்டும்.

வடக்கிலும் தையிட்டி பிரச்சினை போன்று வேறு, வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியலை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

தையிட்டி விகாரைப் பிரச்சினை, குருந்தூர் மலைப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும். வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு மீண்டெழாத வகையிலேயே நாங்கள் தீர்வு காண முடியும்.

நாங்கள் போக்குவரத்துத் துறையிலே பாரிய மாற்றத்தைச் செய்யவுள்ளோம். கொழும்பில் ஆரம்பித்தது போன்று யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பஸ் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். வடக்கில் உள்ள மக்களாயினும் சரி, மலையகத்தில் உள்ள மக்களாயினும் சரி, அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த வசதிகளைச் செய்து கொடுப்பதே எங்கள் அரசின் இலக்காகும்.

இலங்கையிலுள்ள பத்து நகரங்களை அபிவிருத்தி அடைந்த நகரங்களாக மாற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முடிவெடுத்திருக்கின்றார். அந்தப் பத்து நகரங்களில் யாழ்ப்பாணமும் அடங்குகின்றது. யாழ்ப்பாணம் நகரத்திலும் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்யவுள்ளோம்.

ராஜபக்‌ஷக்கள், ரணில் விக்கிரமசிங்கக்கள் போன்ற போலிச் சண்டியர்களுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். நாங்கள் அடிபணிவது இந்த நாட்டு மக்களின் ஆணைக்கு மாத்திரமே ஆகும். இந்தப் போலிச் சண்டியர்கள் சிறைகளில் அடைக்கப்படுவார்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.