அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்புக் கட்டமைப்பிலும் கோளாறு மோசடி நடைபெறவில்லை.

டிரம்பின் மோசடிக் குற்றச்சாட்டை தேர்தல் துறையினர் நிராகரிப்பு

அமெரிக்காவில் மத்திய, மாநில அளவிலான மூத்த தேர்தல் துறை அதிகாரிகள் வாக்கு நிலையங்களில் செலுத்திய வாக்குகள் தொலையவில்லை என்றும் மாற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்புக் கட்டமைப்பிலும் கோளாறு ஏற்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தேர்தல் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அந்த அதிகாரிகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுவதுபோல் எதுவும் நிகழவில்லை என்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு சார்பாக விழுந்த 2.7 மில்லியன் வாக்குகள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் ஆதாரமின்றி குற்றம்சாட்டியிருந்தார். இந்த தேர்தலில் ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்குத் தகுதி பெற தேவைப்படும் 270 தேர்தல் சபை வாக்குகளை விட அதிகமான இடங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக முன்னிலை நிலவரம் கூறுகிறது. இருப்பினும் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் முழுமையாக வெளி வரவில்லை.

இம்மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தல், அமெரிக்க வரலாற்றிலேயே அதிகப் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட தேர்தல் என்ற அதிகாரிகள், மோசடி நிகழ்ந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினர்.

இதன்படி தேர்தல் வாக்குப்பதிவு மோசடி தொடர்பான ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அந்நாட்டின் உள்துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பான சி.ஐ.எஸ்.ஏ குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுதான் தேர்தலில் வாக்குப்பதிவு பாதுகாப்பான வசதிகளுடன் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும். இந்தக் குழுவின் அதிகாரிகள், “எங்களுக்கு கிடைத்த தகவலின்படி வாக்குப்பதிவில் மோசடி, முறைகேடு நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

தேர்தல் பாதுகாப்பு மற்றும் நேர்மை மீது நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளோம். நீங்களும் அப்படியே கருத வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக சந்தேகம் எழுந்தால் நேரடியாக தேர்தல் அதிகாரிகளிடம் வந்து பேசுங்கள். அவர்கள்தான் நம்பகத்துக்குரிய குரல்களாக வாக்குப்பதிவு நடைமுறைக்கு சான்று கூற அதிகாரம் பெற்றவர்கள்” என்று தெரிவித்தனர்.

முன்னதாக, தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக வெளிப்படையாக ஊடகங்களிடம் பேசியதற்காக டிரம்ப் நிர்வாகத்தால் தான் பணியில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்று சி.ஐ.எஸ்.ஏ குழுவின் தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் கிரெப்ஸ் கூறியதாக ரோய்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

கடந்த வியாழக்கிழமை கிறிஸ்டோபர் கிரெப்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தேர்தல் சட்ட வல்லுநர் பதிவிட்ட கருத்தை ரீ-ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில், “தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை யார் வெளியிட்டாலும் அதை ரீ-ட்வீட் செய்யாதீர்கள். அது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும்” என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, சி.ஐ.எஸ்.ஏ குழுவின் உதவிப் பணிப்பாளர் பிரையன் வேர் தனது பதவியில் இருந்து விலகினார். அவரை வெள்ளை மாளிகை அதிகாரிகள் பதவி விலக கேட்டுக் கொண்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி முகாமை தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறையை மோசடி என கூறி வரும் டொனால்ட் டிரம்ப் கருத்தை ஆதரிக்கும் குடியரசு கட்சியினர் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை சிறுமைப்படுத்தி வருவதாக கவலை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.