நம்மைப் பிரிப்பதை விட இணைப்பதே அதிகம் – விஜய்க்கு சஜித் உருக்கமான செய்தி.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அரசியலில் நிலவும் பிரிவினைகளைக் கடந்து ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

“தமிழகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள். சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி நீங்கள் பேசியுள்ளீர்கள். வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது கட்டப்படும் சமூகங்கள் இறுதியில் தனித்துவிடப்படும் என்பதையே வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.” – என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

நம் பிராந்தியத்தில் உள்ள மக்கள் மொழி, மதம் அல்லது அடையாளம் கடந்து எதிர்பார்ப்பது சமூக முன்னேற்றம் மற்றும் நீதியை மட்டுமே என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நம்மைப் பிரிக்கும் விடயங்களை விட, நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளே அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும், கடந்த காலத்தில் மற்றவர்கள் இடைவெளியை உருவாக்கிய இடங்களில் புரிதலையும் ஏற்படுத்தும் என நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் கொள்கைப் பிரகடனங்கள் இலங்கையின் அரசியல் தலைமைகளையும் கவர்ந்துள்ள நிலையில், சஜித் பிரேமதாஸவின் இந்த வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.