மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்துக! – அரசிடம் சாணக்கியன் எம்.பி. இடித்துரைப்பு.

“நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளின் அதிகாரம் அதிகாரிகளின் பிடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல் மாத்திரமன்றி, மாகாணங்களின் இயல்பான நிர்வாகச் செயற்பாடுகளையும் கடுமையாகப் பாதிக்கின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அரசு அண்மையில் முன்னெடுத்து வரும் புதிய நியமனங்கள் தொடர்பில் கடுமையான சந்தேகங்களையும் அவர் எழுப்பினார். குறிப்பாக, மாவட்ட ரீதியாக சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பது எவ்வகையான அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“தேர்தல் நடத்தப்படாத ஒரு சூழலில், இவ்வாறான பதவிகளை ஆளும் தரப்பினருக்கு வழங்குவது தேர்தல் வெற்றிக்கான ஒரு தந்திரோபாயமாகவே தெரிகின்றது. இது அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் நேரடி அரசியல் தலையீடுகளைச் செய்வதற்கான முயற்சியாகும்.” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அடிப்படைத் தேவைகளுடன் தொடர்புடைய சுகாதாரத் துறையை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்று எச்சரித்த சாணக்கியன் எம்.பி., முறையான தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்துமாறும் அரசைக் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.