முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ யாழிலிருந்து இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பம் – தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி தொடக்கம்.

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தப் பவனி, இன்று காலை யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றப்பட்டு உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஊர்திப் பவனியானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பயணிக்கவுள்ளது.

இறுதிப் போரின் சாட்சியமாக விளங்கும் முள்ளிவாய்க்கால் மண்ணை எதிர்வரும் மே 18 ஆம் திகதி இந்தப் பவனி சென்றடையவுள்ளது.

ஊர்திப் பவனியின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு, தியாக தீபத்தின் நினைவிட முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டது. யுத்தத்தின் இறுதி நாட்களில் உணவின்றித் தவித்த மக்களின் வலிகளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பயணக் காலங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாண்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஊர்திப் பவனியில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.