புத்தசாசன அமைச்சின் கீழ் யாழ். திருவள்ளுவர் மையம்: திட்டமிட்ட தமிழின அழிப்பு! – கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்கக் குற்றச்சாட்டு.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தைப் புத்தசாசன அமைச்சின் கீழ் கொண்டுவந்தமை திட்டமிட்ட தமிழின அழிப்பின் ஓர் அங்கமே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு எனக் கலாசார ரீதியாக எந்தவொரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற பேரினவாத எண்ணமே இந்த அமைச்சரவை முடிவுக்குப் பின்னால் உள்ளது.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் மத மற்றும் கலாசார அடையாளங்களை அழிப்பதில் புத்தசாசன அமைச்சே பிரதான பங்கு வகிக்கின்றது. அவ்வாறான ஓர் அமைச்சின் கீழ் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை உள்வாங்கியது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, கடந்த கால அரசுகளை விடவும் மிக மோசமான முறையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பறைசாற்றும் கலாசார விழுமியங்களைத் திரிவுபடுத்தும் இந்த முயற்சியைத் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.” – என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
