அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி அதிரடியாகப் பணி இடைநீக்கம்!
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றி வந்த ஏ.சி. றிஸ்வான், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான உத்தியோகபூர்வ தொலைநகல் செய்தி அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
நீதிபதி ஏ.சி. றிஸ்வானுக்கு எதிராகப் பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அது குறித்த முதற்கட்ட விசாரணைகளை நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசேட விசாரணைப் பிரிவினர் அண்மைக் காலமாக முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்த விசாரணைகளின் முடிவிலும், அதன் அடுத்தகட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளின் அடிப்படையிலுமே, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த அதிரடிப் பணி இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
